பயிர் பாதுகாப்பு :: பாதுகாப்பு முறைகள்

பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பொழுது ஏற்படும் விபத்துக்களைத் தடுக்க சில பாதுகாப்பு முறைகள்:

நம் நாட்டில் வளர்ந்துவரும் மக்கள் தொகைக்கு உணவளிக்க உற்பத்தியைப் பெருக்குதல் அவசியம். அதற்கு வேளாண்மைத் தொழில் மேம்படுத்தப்பட வேண்டும். வேளாண்மைத் தொழில் விரிவடைய வேண்டுமானால் விளை பயிர்களிலிருந்து அதிக விளைச்சல் கிடைக்க வேண்டும். ஆனால் பல்வேறு வகையான பூச்சிகள் மற்றும் நோய்களினால் பயிர்கள் தாக்கப்பட்டு விளைச்சல் குறைந்து வருகின்ற சூழ்நிலையை நாம் கண்கூடாகக் காண்கிறோம். நோயற்ற பயிரே நிறைவான விளைச்சல் தரும் எனும் கூற்றிற்கு இணங்க பூச்சி மருந்து தெளித்து நோயினைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
மருந்து தெளிப்பதற்கு தெளிப்பான்களையே அனைத்து உழவர்களும் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். பூச்சி மருந்து தெளிக்கும் பொழுது அதற்கான வழிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகளையும் அறிந்து கொண்டு இயக்குவது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு தெளிப்பான்களைப் பயன்படுத்தும் போது ஏற்படக்கூடிய விபத்துகளும் அவற்றைத் தடுப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முறைகளும் வருமாறு.

பூச்சிக்கொல்லி பயன்படுத்தும் முன் கவனிக்க வேண்டியவை


  1. பூச்சிக்கொல்லி மருந்து தேவைப்படும் பொழுது மட்டுமே பயன்படுத்துதல் வேண்டும்.
  2. பூச்சிக்கொல்லி மருந்து வாங்கியவுடன் அதன் மேல் ஒட்டப்பட்டுள்ள லேபிளில் உள்ள வழிமுறைகளைக் கவனமாகப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்
  3. பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஆட்களையே பயன்படுத்துதல் வேண்டும்.
  4. மருந்து தெளிப்பவர் பாதுகாப்பு உடைகளையும் இரப்பர் காலணிகளையும், கைகளுக்குப் பாதுகாப்பு உறைகளையும் அணிந்து கொள்ள வேண்டும்.
  5. மருந்து தெளிப்பவர் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருந்துவப் பரிசோதனை செய்து கொள்ளுதல் வேண்டும்
  6. மருந்து தெளிக்கும் தெளிப்பான்களைப் பரிசோதித்துக் கசிவுகள் எங்கேனும் இருந்தால் சரிசெய்து சரியான இயக்கத்திற்கான ஆயத்த நிலையில் வைத்திக் கொள்ளுதல் வேண்டும்.
  7. மருந்து தெளிக்கும் இடத்திற்கு அருகில் சுத்தமான நீர், சோப்புக்கட்டி, துண்டு ஆகியவற்றைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுதல் வேண்டும். இதனால் தற்செயலாக கைகளிலோ, உடலிலோ மருந்து பட்டுவிட்டால் உடனே சுத்தம் செய்து கொள்ள முடியும்
  8. மருந்துகளை நன்கு பாதுகாப்பான பூட்டிய அறையில் தெளிப்பதோ, தூவுவதோ கூடாது
  9. மருந்துகளைக் கையாளுவதற்கு சூழ்நிலைகளையோ வயது முதிர்ந்தவர்களையோ, கருவுற்ற தாய்மார்களையோ குழந்தைகளைப் பராமரிக்கும் பெண்களையோ அனுமதித்தலைத் தவிர்த்தல் வேண்டும். மேலும் நோய்வாய்ப்பட்டவர்களையும் மருந்துகளைக் கையாள்வதற்கு அனுமதிக்கக் கூடாது
  10. மருந்துகளை அதற்குரிய புட்டி அல்லது கலன்களில் வைக்க வேண்டும். அவற்றை வேறு கலன்களுக்கு மாற்றி வைக்கக் கூடாது
  11. பூச்சி மருந்து வைக்கப்பட்டுள்ள அறைகளில் தூங்குவதைத் தவிர்ப்பது நல்லது
  12. காலியான பூச்சி மருந்து புட்டி மற்றும் கலன்களை நீர் நிலைகளிலோ, வயலிலோ வீசி எரிவதை அறவே தவிர்க்க வேண்டும். அவற்றை வீட்டில் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். அவற்றை பூமியில் புதைத்து விடுவது நல்லது.

 

மருந்து தெளிக்கும் பொழுது கையாள வேண்டிய பாதுகாப்பு முறைகள்:

  1. மருந்து தெளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் உணவு அருந்தவோ குடிநீர் அருந்தவோ கூடாது
  2. மருந்து கலக்கும் பொழுது எப்பொழுதுமே காற்று வீசும் திசையிலேயே நின்று கலக்க வேண்டும்
  3. பூச்சிக்கொல்லியானது சரியான விகிதத்தில் நீருடன் கலக்கப்பட்டுள்ளதா என்பதை பரிசோதித்துக் கொள்ளவும்
  4. காற்று வீசும் திசையிலேயே மருந்து தெளிப்பவர் நடந்து செல்ல வேண்டும். அப்பொழுதுதான் முன்னேறிச் செல்லும்பொழுது மருந்தின் தாக்கமின்றிச் செல்ல முடியும்
  5. எக்காரணத்தைக் கொண்டும் அடைபட்ட நாசில்களை வாயால் ஊதி சுத்தம் செய்யக் கூடாது. இதற்காக ஒரு சிறு குச்சியைப் பயன்படுத்தலாம்.
  6. பரிந்துரை செய்யப்பட்ட சரியான அளவிலேயே பயிர்களுக்கு மருந்து அடிக்க வேண்டும்
  7. அருகில் அறுவடைக்குத் தயார் நிலையில் இருக்கும் பயிர்கள், நீர் நிலைகள், மேய்ச்சல் நிலங்கள் இருந்தால் அடிக்கும் மருந்து அவற்றிற்குச் சென்று சேராவண்ணம் மிகவும் கவனத்துடன் அடிக்க வேண்டும்
  8. மருந்து தெளிப்பவர் உடலில் காயங்கள், புண்கள் எதுவும் இல்லாதவராக இருக்க வேண்டும்
  9. தனியாளாக மருந்தடிக்கக் கூடாது. உடன் ஒருவர் எப்போதும் இருப்பது நல்லது
  10. ஒரு நாளில் மருந்தடித்தல் முடிந்தவுடன் சோப்பு போட்டுக் குளித்து, ஆடைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். கழற்றிய ஆடைகளைத் துவைக்காமல் மறுபடியும் உடுத்தக் கூடாது.
 

பயிர்ப் பாதுகாப்புக் கருவிகள் நீண்ட நாட்கள் உழைக்க கையாள வேண்டிய முறைகள்:

  1. மருந்தடிக்கும் வேலை முடிந்தவுடன் அன்றே பயிர்ப்பாதுகாப்புக் கருவிகளின் மருந்து கலனில் உள்ள மருந்தினை முழுவதும் காலி செய்து விட்டு சுத்தம் செய்து வைக்க வேண்டும். மருந்து அடிக்காத வேளையில் பயிர்ப்பாதுகாப்புக் கருவிகளை (விசைத் தெளிப்பான் நீங்கலாக) தலை கீழே வைப்பமு நல்லது. அவற்றின் மூடி மற்றும் பிளாஸ்டிக் குழாய்களைத் திறந்து வைப்பதன் மூலம் ஈரம் முழுவதையும் உலரச் செய்யலாம்.
  2. விசைத் தெளிப்பானை நீண்ட நாட்களுக்கு வெறுமனே வைப்பதற்கு முன் பெட்ரோல் கலனிலிருந்து பெட்ரோல் முழுவதையும் வடித்துவிட வேண்டும். கார்புரேட்டரிலும் பெட்ரோல் குழாய்களிலும் பெட்ரோலைத் தங்கவிடக் கூடாது.
  3. மருந்தடிக்கும் வேலை இல்லாத நாட்களில் வாசர்கள், பேரிங்குகள் போன்ற பாகங்களுக்கு உணவு எண்ணெய் இட்டு வருதல் அவசியம்.
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013